சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Trains Cancelled Between Chennai Beach and Thiruvannamalai | பொதுமக்களுக்கு பிரதான போக்குவரத்தாக ரயில்கள் உள்ள நிலையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Published: 

19 Jun 2025 08:39 AM

சென்னை, ஜூன் 19 : சென்னை கடற்கரை (Chennai Beach) – திருவண்ணாமலை (Thiruvannamalai) இடையிலான பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள காட்பாடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே ஜூன் 20, 2025 மற்றும் ஜூன் 23, 2025 ஆகிய தேதிகளில் ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, காட்பாடியில் இருந்து வரும் ஜூன் 20, 2025 மற்றும் ஜூன் 23, 2025 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் மற்றும் மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து இதே தேதிகளில் இரவு 7:10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இதே தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருவண்ணாமலையிலிருந்து வரும் ஜூன் 21, 2025 மற்றும் ஜூன் 24, 2025 ஆகிய தேதிகளில் காலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 20, 2025 முதல் ஜூன் 23, 2025 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள்

பகுதி நேரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்

அரக்கோணத்தில் இருந்து வரும் ஜூன் 20, 2025 மற்றும் ஜூன் 23, 2025 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரயில், சேவூர் – காட்பாடி இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல விழுப்புரத்தில் இருந்து வரும் ஜூன் 20, 2025 மற்றும் ஜூன் 23, 2025 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் வேலூர் காட்பாடி இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.