Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர்.. புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!
Indian Army Releases New Video on Pakistan Strikes | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், மே 7, 2025 முதல் மே 10, 2025 வரை இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதல்களின் வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டு வருகிறது.

வைரல் வீடியோ
புதுடெல்லி, மே 19 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) ராணுவ நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் (Indian Army) வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 7, 2025 அன்று பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படதை தொடர்ந்து இந்தியா ராணுவம் தொடர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மே 18, 2025) இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வரும் மோதல்
ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா, மே 7, 2025 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதனை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன் காரணமாக அடுத்த மூன்று நாட்கள் இந்தியா – பாகிஸ்தான் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன.
இந்த நிலையில், மே 10, 2025 அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, அன்றைய தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக அறிவித்தது. இதேபோல குஜராத்தில் விமானப்படையினரை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக அறிவித்தார். இதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வது உறுதியாகியது.
புதிய வீடியோவை வெளியிட்ட இந்தியா ராணுவம்
Planned, trained & executed.
Justice served.@adgpi@prodefencechan1 pic.twitter.com/Hx42p0nnon
— Western Command – Indian Army (@westerncomd_IA) May 18, 2025
இந்த நிலையில், இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவம் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பேசியுள்ள ராணுவ வீரர்கள், பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா எரிமலையாக வெடித்தது. இந்த தாக்குதலுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அந்த பாடம் பல்வேறு தலைமுறை நினைவு கூர வேண்டியதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.