காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

4 children died while locked up in car | ஆந்திர பிரதேசத்தில் காருக்குள் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் 4 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 May 2025 09:06 AM

ஆந்திர பிரதேசம், மே 19 : ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) காருக்குள் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் 4 பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக காருக்குள் ஏறிய நிலையில், இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர்கள் திருமணம் விழாவிற்காக குழந்தைகளை அழைத்துச் சென்ற நிலையில், காருக்குள் விளையாட சென்ற சிறுவர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காருக்குள் விளையாட சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

ஆந்திர பிரதேச மாநிலம், துவாரபுடி கிராமத்தில் காரில் ஏறி விளையாட சென்ற 4 சிறுவர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக தங்களது பெற்றோர்களுடன் வந்த சிறுவர்கள் நான்கு பேர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர். அப்போது திடீரென கார் லாக் ஆகி உள்ளது. இதனால் வெகு நேரமாக காரில் இருந்து வெளியே வர முடியாமல் சிறுவர்கள் தவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் 6 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள்.

சிறுவர்கள் உயிரிழந்தது எப்படி – அமைச்சர் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஆந்திர பிரதேச அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ், திருமண நிகழ்வுக்கு வந்தபோது இந்த கோர நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் அருகில் இருந்த காரில் ஏறி விளையாட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர்கள் தங்களை காருக்குள் வைத்து பூட்டிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காருக்குள் சிக்கி சிறுவர்கள் உயிரிழந்த பிறகு தான் அது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு அது குறித்து தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், காருக்குள் சிக்கி மூச்சு திணறி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.