திருப்பூரில் பயங்கரம்… நடுரோட்டில் செவிலியர் அடித்து கொலை… பகீர் பின்னணி!
Nurse Murder In Tiruppur : திருப்பூர் மாவட்டத்தில் செவிலியரின் தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார். ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், செவிலியரை, அவரது கணவர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

திருப்பூர், மே 02: திருப்பூரில் செவிலியர் அடித்துக் கொலை செய்யப்ட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, தலை மற்றும் கைகளில் கற்களால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மேலும், அ ந்த பெண் செவிலியர் உடையை அணிந்து இருந்தார்.
நடுரோட்டில் செவிலியர் அடித்து கொலை
இதனை அடுத்து, அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து, சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். அப்போது, கொலை செய்யப்பட்ட பெண் சித்ரா என்பது தெரியவந்தது. அவர், பல்லடத்தில் தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிக்கு சேர்ந்து 20 நாட்கள் மட்டுமே ஆவதாக கூறப்படுகிறது.
சித்ராவுக்கு 11ஆம் ஆண்டு முன்பு ராஜேஷ் கண்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தனது இரண்டு குழந்தைகளுடன் வாடிப்பட்டி பகுதியில் தங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
பகீர் பின்னணி
மேலும், சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் ராஜேஷ் கண்ணா தகராறு செய்தும் வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தனது இரண்டு குழந்தைகளுடன் திருப்பூருக்கு வந்து தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்ல ராஜேஷ் கண்ணா திருப்பூருக்கு வந்துள்ளார். அப்போது, தான் இனி தகராறு செய்ய மாட்டேன் என ராஜேஷ் கூறியிருக்கிறார். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 30ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து சித்ராவை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சித்ராவின் தலையில் கல்லை போட்டு ராஜேஷ் கண்ணா கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ராஜேஷ் கண்ணா, தனது குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், ராஜேஷ் கண்ணாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.