அரசியலில் ஈடுபட 100 சதவீதம் தைரியம் வேண்டும் – நடிகர் அஜித் குமார் பேச்சு!

Actor Ajith Kumar: நடிகர் அஜித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்தும் அவருக்கு அரசியல் மீது உள்ள கருத்து குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் அரசியலில் ஈடுபடுவதற்கு மிகவும் தைரியம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபட 100 சதவீதம் தைரியம் வேண்டும் - நடிகர் அஜித் குமார் பேச்சு!

அஜித் குமார்

Updated On: 

02 May 2025 11:06 AM

அரசியலில் நடிகர்கள் ஈடுபடுவது குறித்தும் அதற்கு 100 சதவீதம் தைரியம் வேண்டும் என்றும் நடிகர் அஜித் குமார் தெரிவித்தது தற்போது வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தமிழில் இறுதியாக நடித்தப் படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முந்தைய படமான விடாமுயற்சியில் கூட்டணி வைத்திருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராப் என பலர் நடித்திருந்தனர். மகனுக்காக என்ன வேணும்னாலும் செய்யும் தந்தையாக இருப்பார் நடிகர் அஜித் குமார்.

ரெட் ட்ராகன் என்று பெரிய கேங்ஸ்டராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தனது மகனுக்காக திருந்தி வாழ ஆசைப்படுகிறார். 18 வருடங்கள் ஜெயிலில் கழித்த பிறகு தனது மகனைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் நடிகர் அஜித்திற்கு வெளியே வந்து பார்த்த போது பேரதிர்ச்சி காத்திருக்கின்றது.

அந்த சிக்கல்களை எல்லாம் எப்படி அஜித் சமாளித்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் திழைத்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் அஜித் குமாருக்கு கடந்த 28-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசு.

இந்த விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் இந்தியா டுடே செய்திக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அது நேற்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர். அதில் நடிகர் அஜித் சினிமா குறித்தும், ரேஸிங் மீது அவருக்கு உள்ள ஆர்வம் குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதில் சினிமாவில் அவர் நடிக்க வந்ததே ரேஸிங்காகதான் என்றும். மேலும் குடும்பத்தில் இருந்த கடன்களை அடைக்கவும் தான் நடிக்க தொடங்கியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். அஜித்திடம் அரசியலில் நடிகர்கள் ஈடுபடுவது குறித்தும் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் வீடியோ:

அதற்கு பதிலளித்த நடிகர் அஜித் எனக்கு அதில் துளியும் ஆர்வம் இல்லை. ஆனால் என்னுடைய சக நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது அவரகளது சொந்த விருப்பம். இந்த ஜனநாயகத்தில் மக்கள் அவர்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமை உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் நடிகர் அஜித் குமாரிடம் அரசியலில் ஈடுபட தைரியம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு 100 சதவீதம் நிச்சயமாக தைரியம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.