பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா? முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோவால் சர்ச்சை
Pakistan Video Sparks Controversy : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முநீர் தான் காரணம் என முன்னாள் ராணுவ அதிகாரி ஆதில் ராஜா வீடியோவில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) உள்ள பஹல்காமில் (Pahalgam) நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் செய்தி நிறுவனங்கள், பாகிஸ்தானியர்களின் இன்ஸடாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஜெனரல் ஆசிம் முனீர் நேரடித் தொடர்புடையவர் என அந்நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி ஆதில் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி காரணமா?
இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆதில் ராஜா பேசியதாவது, நான் பாகிஸ்தான் ராணுவத்தில் 21 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். 3வது தலைமுறையாக பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றினேன். என் தேசப்பற்று குறித்து யாரும் குறை கூற முடியாது. எனக்கு கிடைத்த தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஆசிம் முனீர் கட்டளையிட்டார். அவரது சொந்த விருப்பத்தின் பெயரில் இதனை நடத்த திட்டமிட்டார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தடுத்தும் அவர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கினார் என்று பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி பேசும் வீடியோ
बडी खबर : पाकिस्तान के पुर्व आर्मी ऑफिसर ने खुलासा किया की पहलगांव मे आतंकी हमला करने का ऑर्डर पाकिस्तान के जनरल आसीम मुनीर ने दिया था।
— Cyber Huntss (@Cyber_Huntss) May 3, 2025
மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தரையில் இருந்து ஏவப்பட்டு சுமார் 450 கிலோ மீட்டர் சென்று இலக்கை அடையும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் இந்த சோதனையை வழக்கமான பாதுகாப்பு ஆய்வுப் பயிற்சியின் ஒரு பகுதியாகவே செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணி குறித்து பாகிஸ்தான் அரசு எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவாகியிருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்திய ராணுவத்திலிருந்து தாக்குதலுக்கான அச்சம் எழுந்துள்ளதையடுத்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5,000 வீரர்களும் அதிகாரிகளும் தங்கள் பதவிகளை விட்டு விலகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரின் குடும்ப உறுப்பினர்கள், தாக்குதலுக்கான அச்சத்தால் ராணுவத்திலிருந்து வெளியேறுமாறு அழுத்தம் வழங்கியுள்ளனர். பாதுகாப்பு குறித்த கவலையினால் சிலர் தாங்களே முன்வந்து ராஜினாமா செய்துள்ளனர்.