சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட்.. ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் கேரள கிரிக்கெட் சங்கம் தடை
கேரள கிரிக்கெட் சங்கம், சஞ்சு சாம்சன் குறித்த ஸ்ரீசாந்தின் விமர்சனத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டு தடை விதித்துள்ளது. தொலைக்காட்சி விவாதத்தில் சாம்சன் மற்றும் கேரள கிரிக்கெட் சங்கம் குறித்து ஸ்ரீசாந்த் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் - ஸ்ரீசாந்த்
சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) இடம் பெறாததை விமர்சித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்துக்கு(Sreesanth) கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2025, ஏப்ரல் 30 ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் அமைப்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த் தற்போது கேரள கிரிக்கெட் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றான கொல்லம் ஏரிஸின் இணை உரிமையாளராக உள்ளார். இப்படியான நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான சாந்தகுமார் ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக டெஸ்ட், டி20 தொடர் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2007 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தவர்களில் இவரும் ஒருவர். அதேபோல் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இடம் பெற்றிருந்தார்.. ஐபிஎல் தொடரிலும் அசத்திய ஸ்ரீசாந்த் 2013 ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கினார். அத்துடன் அவரது கிரிக்கெட் பயணமும் முடிவுக்கு வந்தது.
சஞ்சு சாம்சன் தந்தைக்கும் நோட்டீஸ்
மலையாள தொலைக்காட்சி சேனலில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற ஸ்ரீசாந்த், மாநில கிரிக்கெட் அமைப்பை பற்றியும், சஞ்சு சாம்சனையும் இணைத்து பேசியதாக கூறி கேரள கிரிக்கெட் அமைப்பு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சனின் பெயரைப் பயன்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக கூறி சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், ரெஜி லூகாஸ் மற்றும் சேனல் தொகுப்பாளருக்கு எதிராக இழப்பீடு கோரவும் பொதுக்குழு முடிவு செய்தது.
இப்படியான நிலையில் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கான காரணத்தை கேரள கிரிக்கெட் சங்கம் தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது சஞ்சு சாம்சன் சாம்பியன் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து இவர்கள் தெரிவித்த கருத்துக்காக நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும், கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்ததற்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி விவாதத்தில் ஸ்ரீ சாந்த் சஞ்சு சாம்சனுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் கேரளா அணையிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது தான் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் அவரது தேர்வை பாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரள கிரிக்கெட் லீக்கில் விளையாடும் அணிகளின் உரிமையாளர்கள் அதன் நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.