இன்று ஆடிக் கிருத்திகை 2025: விரதம் எப்போது? எப்படி இருக்க வேண்டும்?
Aadi Krithikai 2025: 2025 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் வருகின்றன. 2025 ஜூலை 20 மற்றும் 2025 ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் வருகின்ற இந்த நட்சத்திரங்களில், 2025 ஆகஸ்ட் 16 அன்று வரும் கிருத்திகை அஷ்டமி திதியுடன் இணைந்து வருவதால் சிறப்பு வாய்ந்தது.

இன்று ஜூலை 20, 2025 – ஆடி மாதத்தின் முதல் கிருத்திகை நட்சத்திரம். பக்தர்கள் முருகனின் அருளை பெற, விரதம் இருந்து, கோவில்களில் கூட்டமாக வழிபாடு செய்கின்றனர். இன்று வரும் கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வருவதால், பக்தர்களுக்கு வழிபாட்டிற்கும், விரதத்திற்கும் வசதியான நாளாக அமைந்துள்ளது. ஆடிக் கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து முருகப் பெருமான் மீது பக்தி செலுத்தும் நிகழ்வு, ஆண்டுதோறும் பக்தர்களால் ஆவலோடு காத்திருக்கப்படும் ஒரு முக்கியமான ஆன்மிக நிகழ்வாகும். முருக பக்தர்கள், இந்நாளில் விரதம் இருந்து, தேவசேனாபதியிடம் வேண்டுதல்களை முன்வைத்து அருளைப் பெறும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.
ஆடியில் விரதம் இருந்தால் இரட்டிப்பு பலன்
ஆடி மாதம் அம்பிகையின் மாதமாகக் கருதப்படும் நிலையில், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். குழந்தை பெறுதல், திருமணம் கைகூடுதல் போன்ற நன்மைகளுக்காக முருக பக்தர்கள் இந்நாளை தேர்வாகக் கொண்டாடுகின்றனர். அம்பிகையும் முருகனும் சேர்ந்து அருள்புரிவதால், ஆடிக் கிருத்திகைக்கு விசேஷமாய் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இரண்டு கிருத்திகை – எது சரி?
2025ம் ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஜூலை 20 (ஞாயிறு) மற்றும் ஆகஸ்ட் 16 (சனி) ஆகிய நாட்களில் கிருத்திகை நட்சத்திரம் ஏற்படுகிறது. பஞ்சாங்கக் கணக்குப்படி, இரண்டாவது கிருத்திகை நாளான 2025 ஆகஸ்ட் 16த்தையே ஆடிக் கிருத்திகையாகக் கருதுவது சரியானது என குறிப்பிடப்படுகிறது.
Also Read: சிவனின் ஆசி கிடைக்கணுமா? – 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய விஷயம்!
எந்த நாளில் விரதம் இருக்கலாம்?
முருக பக்தர்கள், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், 2025 ஜூலை 20 அல்லது 2025 ஆகஸ்ட் 16ம் தேதிகளில் விரதம் இருக்கலாம். பொதுவான விரதத்திற்காக 2025 ஜூலை 20 சிறந்த நாள் என பலர் கருதினாலும், குழந்தை வரம், திருமணச் சிக்கல் போன்ற விருப்பங்கள் உள்ளவர்கள் 2025 ஆகஸ்ட் 16 அன்று விரதம் இருக்கலாம். இரு நாட்களிலும் விரதம் இருந்தால் சிறந்த பலன் உண்டு.
அஷ்டமியுடன் கூடிய கிருத்திகை
2025 ஆகஸ்ட் 16 அன்று தேய்பிறை அஷ்டமி திதி இணைவதால் அந்த நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கால பைரவர், முருகன், அம்பிகை ஆகியோரையும் ஒரே நாளில் வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். கடன் சிக்கல், குடும்ப பிரச்சனைகள் போன்றவை உள்ளவர்கள் இந்நாளில் விரதமிருந்து முழு பக்தியுடன் வழிபட்டால் நிச்சயமாக நன்மை தரும்.
விரதம் இருக்கும் முறைகள்
2025 ஜூலை 20ம் தேதி அதிகாலை 12.14 முதல் இரவு 10.36 வரை கிருத்திகை நட்சத்திரம், 2025 ஆகஸ்ட் 16ம் தேதி காலை 08.27 முதல் அடுத்த நாள் காலை 06.48 வரை உள்ளது. விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, பால் அல்லது பழம் சாப்பிட்டும் அல்லது முழுமையாக பட்டினியாகவும் விரதம் இருக்கலாம். சிவப்பு மலர், ஷட்கோண கோலம், ஆறு அகல் விளக்குகள், தேன் கலந்த பால் நைவேத்தியம், கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடி வழிபடலாம். “ஓம் சரவண பவ” மந்திரத்தை 108 அல்லது 1008 முறைகள் சொல்வது சிறந்தது.
முருகனுக்கு அபிஷேகம், தானம் வழங்குவது சிறப்பு
விரதத்தின் இறுதியில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு பாலை அர்ப்பணிக்கலாம். செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரத முடிக்கலாம். மாலையிலும் தீபம் ஏற்றி, வழிபாடுகளை மேற்கொண்டு, பசுமை உணவு, பொருள் அல்லது பணம் போன்றவற்றைத் தானமாக வழங்குவது சிறந்த பலனளிக்கும். மனதில் முருகனை துதித்து முழு பக்தியுடன் விரதத்தை முடிப்பது வழக்கமான நடைமுறை.