‘எனக்கும் மன வருத்தம் உள்ளது’ செங்கோட்டையன் நீக்கம் குறித்து மனம் திறந்த செல்லூர் ராஜூ!
Sellur raju speaks about aiadmk issue: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு கட்சி நிர்வாகிகள் இடையே எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக ஆதரவு மனநிலையே தென்படுகிறது.
மதுரை, நவம்பர் 02: அதிமுகவுக்கு விரோதமாக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் நீக்கப்பட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வருடங்களுக்கு மேல் கட்சியில் பயணித்த மூத்த தலைவரை ஒரே நாளில் நீக்கியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு கட்சியனரிடையே எதிர்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியில் பலரும் அவரது முடிவுக்கு வரவேற்பே தெரிவித்து வருகின்றனர்.
Also read: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!
முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் தேவர் ஜெயந்தியன்று, அக்கட்சியன் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒன்றாக சென்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதோடு, கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றும் கடுகடுத்தார்.
கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவது தவறு:
தொடர்ந்து, கோடநாடு கொலை வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறக்க மறுப்பதாகவும், அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு அவரே காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் முன்வைத்தார். இந்நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவை எதிர்த்து வீழ்த்த வேண்டுமென்ற முனைப்பில் செயல்பட்டு வரும் நிலையில், தனிப்பட்ட ஈகோக்களுக்காக கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது தவறு என்றும், அதன் காரணமாகவே செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
அதிமுகவுக்கு யார் எதிரி?
அதோடு, இந்த நேரத்தில் நமக்கு யார் எதிரி? என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சரி மக்கள் பணி செய்யாமல் அவர்கள் வாரிசு அரசியலை முன்னெடுப்பார்கள் என்று சாடிய அவர், திமுகவின் நிர்வாகமும் மோசமாகவே இருக்கும் என்றார். அதற்கு எடுத்துக்காட்டாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை சுட்டிகாட்டிய அவர், திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் இருந்தும், 5 மண்டல தலைவர்களை தேர்நெடுக்க முடியவில்லை என்றும் விமர்சித்தார். தொடர்ந்து, கட்சிக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களை உடன் வைத்து பொதுச்செயலாளர் கட்சியை வழிநடத்துவதாகவும், தலைமை இருந்தால் அதற்கு கட்டுபட்டு தான் நடக்க வேண்டும். தலைவரிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
Also read: “செங்கோட்டையனை நீக்கியது சிறுபிள்ளைத்தனம்” – எடப்பாடியை விளாசிய சசிகலா!
எனக்கும் மன வருத்தம் இருக்கு:
மேலும், தனக்கும் பல மனம் வருத்தங்கள் இருக்கலாம், அதற்காக அதனை நான் ஊடகங்களிடம் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், பொதுச்செயலாளரை சந்தித்து முறையாக முறையீட வேண்டுமே தவிர கட்சிக்கு விரோதமாக செயல்படக் கூடாது. அவ்வாறு கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அனைத்து அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் வரவேற்க தான் செய்வார்கள் என்றார்.



