அரசுப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை; ராமதாஸ் வைத்த கோரிக்கை!!
Ramadoss urges tn govt: அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை சுட்டிகாட்டி தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு பல்வேறு காரணங்களையும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
சென்னை, நவம்பர் 02: அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அனைத்து உயர் படிப்புகள் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தையும் தமிழக அரசு அதிகரித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் தமிழக அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்தது. இது கடந்த ஆண்டை விட 76,000 கூடுலாகும் என்றும் கூறியிருந்தது. ஆனால், தற்போது மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..
தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு:
இப்படி தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதன் மூலம் அப்பள்ளிகளை மூடும் நிலைக்கு செல்லப்பட்டுள்ளதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 9,27,185 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3,61,940, பிற தனியார் பள்ளிகளில் 5,65,243 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளை விட 2 லட்சம் மாணவர்கள் அதிகமாக தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
ஒரு மாணவர் கூட இல்லாத 311 பள்ளிகள்:
அதோடு, இந்த கல்வி ஆண்டில் 208 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த 1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத 311 பள்ளிகள் உள்ளன. தொடக்கக் கல்வியின் நிலை இப்படி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் போதிய கட்டிட வசதிகள், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு இல்லாதது, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை போன்றவைகளால் தான். தொடக்கக் கல்வியில் சேர்க்கை குறைவு என்பதும், அதனால் பள்ளிகளை மூடுவது என்பதும் தொடக்க கல்வியை மட்டும் பாதிக்காது. பள்ளி பருவ கல்வியையே பாதிக்கும். இது ஏழை, எளிய பிள்ளைகளின் கல்விக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..
குறிப்பாக, கொரோனா காலத்தில் பலர் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். அதன்படி 2022-23ல் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது. அப்படி சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு ஏன் சென்றார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் முதலாம் வகுப்பிலான மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை:
மேலும், தொடக்கப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒன்றிணைப்பது, உபரியாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவது போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அனைத்து உயர் படிப்புகள் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தையும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



