“டாஸ்மாக்கில் இனி MRP-க்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்கக் கூடாது”.. வருகிறது அதிரடி மாற்றம்.. அமைச்சர் விக்னேஷ் உறுதி!!
டாஸ்மாக் துறையில் தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டுவர பல்வேறு திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதில் முதற்கட்டமாக, கடைகளின் மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை 'சென்ட்ரலைஸ்' செய்யப்பட்டு, இனி டாஸ்மாக் நிர்வாகமே நேரடியாக மின் கட்டணத்தைச் செலுத்தும் சூழல் உருவாக்கப்படும். இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும்.
கோவை, மே 24: மின்துறையைப் போலவே டாஸ்மாக் துறையிலும் தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய மிக விரைவில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விக்னேஷ் உறுதி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, தமிழகத்தில் ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதல் வசூல் வேட்டை தொடர்வதாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களிலும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள் குறித்து அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!
ஊழலில் புறையோடிப் போன டாஸ்மாக்:
டாஸ்மாக் என்பது ஊழல் அதிகமாக உள்ள, முறைகேடுகள் புறையோடிப் போன ஒரு நிர்வாகமாக மாறிவிட்டது. டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி சுமார் 43 ஆண்டுகள் ஆகிறது (1983-ல் தொடங்கப்பட்டது). அதன் சில்லறை விற்பனை தொடங்கி 23 ஆண்டுகள் ஆகிறது. இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த விற்பனை மூலம் வரும் வருமானம் அரசின் கஜானாவிற்குச் செல்லாமல் தனிநபர்களின் கஜானாவிற்குச் சென்றுள்ளது. இதன் விளைவாகவே, இன்று மக்கள் டாஸ்மாக் என்றாலே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கூடுதல் கட்டணத்திற்கு முற்றுப்புள்ளி:
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனை நியாயப்படுத்த சில கடை ஊழியர்கள், காலிப் பாட்டில்களைச் சேமித்து வைப்பதற்கான இடவசதி பற்றாக்குறை, மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் மற்றும் கடை வாடகை போன்ற காரணங்களைக் கூறுகின்றனர். ஊழியர்களை இத்தகைய தவறான நடைமுறைக்குப் பழக்கப்படுத்தியுள்ளனர். இந்த முறையை முற்றிலும் ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்கள்:
டாஸ்மாக் துறையில் தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டுவர பல்வேறு திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதில் முதற்கட்டமாக, கடைகளின் மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை ‘சென்ட்ரலைஸ்’ செய்யப்பட்டு, இனி டாஸ்மாக் நிர்வாகமே நேரடியாக மின் கட்டணத்தைச் செலுத்தும் சூழல் உருவாக்கப்படும். இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும்.
முதல்வரின் கடுமையான உத்தரவு:
மதுபாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய், என்னிடம் மிகத் தெளிவாகவும், ஸ்ட்ரிக்டாகவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேல் ஒரு ரூபாய் கூடக் கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.
மின்துறையைப் போலவே டாஸ்மாக் துறையிலும் தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய மிக விரைவில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.