திமுகவின் ‘ஆருடம்’ பலிக்காது.. மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!!
கடந்த ஆட்சிக் காலங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால், எங்கள் அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே காவல் துறை அதிகாரிகள் துரிதமாகப் பணியாற்றி வருகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
சென்னை, மே 24: தவெக ஆட்சிக்கே வராது என்றுதான் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், நாங்கள் ஆட்சி அமைத்துக் காட்டியுள்ளோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, நேற்றை நடந்த திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தவெகவுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் சினிமா கவர்ச்சிக்காகவே விழுந்துள்ளது. இதை விடுத்து அரசியல் எழுச்சிக்கானது அல்ல. இந்த சினிமா கவர்ச்சி வெகு நாட்களுக்கு நீடிக்காது. 2 ஆண்டுகள் கூட இந்த அரசு செயல்படாது. குழந்தைகள் பெற்ற தாயே தேடுவது போல தமிழக மக்கள் கொஞ்ச நாளில் நம்மை தேடி வருவார்கள் என்று விமர்சித்திருந்தார்.
மேலும் படிக்க: 5 வருஷம் ஓடுறதே கஷ்டம்.. தவெகவை வறுத்தெடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!
திமுகவின் ‘ஆருடம்’ பலிக்காது:
இந்நிலையில், சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “தவெக தலைமையிலான ஆட்சி சில ஆண்டுகள் கூட முழுமையாக நீடிக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆருடம் சொல்லி வருகிறார். ஆனால், மக்களின் பேராதரவோடு இந்த ஆட்சி பல ஆண்டுகளைத் தாண்டியும் நீடிக்கும். தவெக ஆட்சிக்கே வராது என்று அவர்கள் முன்பு சொன்னதையும் மீறி நாங்கள் ஆட்சி அமைத்துக் காட்டியுள்ளோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
குற்றங்களுக்கு எதிராக ‘ஜீரோ டாலரன்ஸ்’:
கோவை, திருச்சி சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “கடந்த ஆட்சிக் காலங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால், எங்கள் அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே காவல் துறை அதிகாரிகள் துரிதமாகப் பணியாற்றி வருகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மாநகரங்களின் எல்லைப் பகுதிகள் மற்றும் அனைத்து ஊர்களிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் விஜய்யை பொறுத்தவரை, குற்றங்களுக்கு எதிராகச் சற்றும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறார். கோவையில் நடந்த கொடூர சம்பவத்தில் கூட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும் படிக்க: தவெக அரசு ரீல்ஸ்- இல் காட்டும் ஆர்வத்தை பெண்கள் பாதுகாப்பில் காட்டவில்லை.. முதல்வர் விஜய் மீது நயினார் பாய்ச்சல்!
பண்ணையார் மனப்பான்மைக்குக் கண்டனம்:
காங்கிரஸ் கட்சி குறித்து திமுக கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத் தங்களுக்குக் கீழ் இருக்கும் அடிமைப் போல நடத்த நினைக்கும் திமுகவின் பண்ணையார் மனப்பான்மையையே இது காட்டுகிறது. ஜனநாயகத்தில் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை அந்தந்தக் கட்சியின் தலைமையும் தொண்டர்களும்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.